கத்தார் எரிவாயு மைய வெடிவிபத்து இந்தியர்கள் உட்பட 13 பேர் பலி

தோஹா: கத்தாரில் உள்ள முக்கிய எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 66 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

மேற்காசிய நாடான கத்தாரின் புகழ்பெற்ற, 'ராஸ் லப்பான்' தொழிற்பேட்டையில், 'பர்சான்' எரிவாயு உற்பத்தி மையம் அமைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக நீடித்த ஈரான் - அமெ ரிக்கா மோதல் காரணமாக, இந்த ஆலையில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது இருநாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஆலையை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று முன்தினம் ஆலையில் பணியை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்தன. அப்போது, எதிர்பாராதவிதமாக ஆலையின் ஒரு பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ, ஆலை முழுதும் பரவியது.

இந்த விபத்தில், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 66 தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழப்பை உறுதி செய்த கத்தார் நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் சாத் பின் ஷெரிடா அல்காபி, 'வெடி விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டு உள்ளது.

'இதில், எந்தவித சதிவேலைகளோ, வெளிநபர் தாக்குதலோ இல்லை' என, தெரிவித்துள்ளார். உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு, கத்தாரில் உள்ள இந்திய துாதரகம் இரங்கல் தெரிவித்து உள்ளது.

Advertisement