வீட்டு உபயோக காஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், வீட்டு காஸ் சிலிண்டர்களுக்கு கூடுதலாக பணம் வசசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், 8 தாலுகாக்கள் உள்ளன. செங்கல்பட்டு, மதராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய 6 தாலுகாக்களில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் தனியார் ஏஜென்சி மூலம், வீடு களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

மாவட்டத்தில், 45க்கும் மேற்பட்ட காஸ் ஏஜென்சிகள் மூலம், 14.64 லட்சம் வீடுகளுக்கு, காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு காஸ் சிலிண்டருக்கு 947 ரூபாய் என அரசு நிர்ணயித்துள்ளது.

ஆனால், தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளுக்கு, காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும்போது, 1,000 ரூபாய்க்கு மேல் வசூலிப்பதாக பயனாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

கிராமப்புறங்களுக்கு செல்லும் காஸ் ஏஜென்சி ஊழியர்கள், ஒரு சிலிண்டருக்கு, 1,150 ரூபாய் வசூல் செய்கின்றனர்.

வீடு உபயோக சிலிண்டர்கள், டீக்கடை, சாலையோர கடைகளுக்கு, ஒரு சிலிண்டர் 2,000 ரூபாய் விற்பனை செய்யப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கள்ளச்சந்தையில் விற்கப்படும், வீட்டு உபயோக சிலிண்டர்களை பறிமுதல் செய்யவும், வீடுகளுக்கு வினியோகிக்கும்போது, கூடுதலாக பணம் வசூலிக்கப் படுவதை தடுக்க, மாவட்ட வருவாய் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

@quote@ தனியார் காஸ் ஏஜென்சி மூலம், வீடுகளுக்கு காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, அரசு நிர்ணயித்த விலையைவிட, 1.000 ரூபாய் வாங்குகின்றனர். காஸ் ஏஜென்சி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கின்றனர். -எஸ்.பிரியதர்ஷ்னி வாடிக்கையாளர் செங்கல்பட்டு.quote

Advertisement