ரூ.1,000 லஞ்சம் பெற்ற அரசு பெண் ஊழியர்கள் கைது

திருப்போரூர்: திருப்போரூர் வட்டம், கரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்திய பிரியா, 30. இவர், திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள சமூகநலத்துறை பிரிவில், தன் இரு பெண் குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவி பெற விண்ணப்பித்துள்ளார்.

இப்பிரிவில் ஒன்றிய சமூகநல அலுவலராக உஷாராணி, 57, உதவியாளர்களாக ஜெயலட்சுமி, 57, வளர்மதி, 52, ஆகிய மூன்று பேர் பணிபுரிகின்றனர்.

நலத்திட்ட உதவிக்கு சத்திய பிரியாவிடம், உதவியாளர் ஜெயலட்சுமி 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதற்கு மறுத்த சத்திய பிரியா, செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் நேற்று புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ஆலோசனையின்படி, சத்திய பிரியா நேற்று பகல் 12:00 மணிக்கு, பி.டி.ஓ., அலுவலகம் வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த உதவியாளர் ஜெயலட்சுமியிடம், 1,000 ரூபாயை கொடுத்த போது சமூக நல அலுவலர் உஷாராணியிடம் கொடுக்கும்படி கூறினார்.

அவரிடம் சத்திய பிரியா கொடுத்த 1,000 ரூபாயை, மற்றொரு உதவியாளர் வளர்மதி எடுத்துள்ளார். இதை மறைந்திருந்து கவனித்த செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார், கையும் களவுமாக சிக்கிய மூன்று பெண் ஊழியர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement