சொல்கிறார்கள் –––––––––––––– ‘யார் கைவிட்டாலும் நம் உழைப்பு கைவிடாது!’
கணவரை பிரிந்து, சொந்த தொழில் செய்து சாதித்த தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை சேர்ந்த, 37 வயதாகும் சரண்யா:
என் பெற்றோருக்கு மூன்று மகள்கள்; நான் தான் மூத்தவள். என் சிறு வயதிலேயே பெற்றோர் பிரிந்து விட்டனர். அம்மா கூலி வேலைக்கு சென்று, அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் எங்களை வளர்த்தார். ஏழாம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர முடியாததால், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் கூலி வேலைக்கு சென்றேன்.
சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்து, என் 16வது வயதில், 10,000 ரூபாய் முதலீட்டில், சிறு அளவில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை ஆரம்பித்தேன். ஆனால் லாபகரமாக நடத்த முடியாததால், மீண்டும் கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். அப்போது வீட்டில் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். கணவரின் கெட்ட பழக்கங்களை பொறுத்து கொள்ள முடியாமல், அவரை விட்டு விலகினேன்.
இதனால், ‘ஒரு வருஷம் கூட கணவருடன் வாழாமல் வாழாவெட்டியாக வந்து நிற்கிறாளே’ என்று பலரும் பேசினர். என் தோழி ஒருவர், ‘உலகம் ரொம்ப பெருசு’ என்று நம்பிக்கை வார்த்தைகள் கூறி, மலேஷியாவில் கார்களை சுத்தம் செய்யும் வேலை வாங்கி கொடுத்தார்.
தினமும் 16 மணி நேரம் நின்றபடியே வேலை செய்ய வேண்டும்; தயங்காமல் செய்தேன். சம்பாதித்த பணத்தில் சொந்த ஊரில் நிலம் வாங்கினேன். அப்போது, அம்மா சிமென்ட் உறை தயாரிப்பு தொழில் செய்து வந்தார். ஐந்து ஆண்டுகள் மலேஷியாவில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வந்து, அம்மா நடத்தி வந்த தொழிலை நான் நடத்த ஆரம்பித்தேன்.
சிமென்ட் உறை, ஜன்னல், குழாய், தொட்டிகள் தயாரிக்கும் தொழிலில், 10 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு உயர்ந்தேன். என் முதல் தங்கைக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆனால், எங்களிடம் சொத்து கேட்டு தகராறு செய்த அவளது கணவர், பிரிந்து சென்று விட்டார்.
நாம் தான் குடும்பத்தை தாங்கி பிடிக்க வேண்டும் என்று என்னை நானே சமாதானப்படுத்தி கொண்டு, தங்கை மற்றும் அவளது குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறேன். கடைசி தங்கை எனக்கு உதவியாக இருக்கிறாள்.
ஆண்களால் தான் செய்ய முடியும் என்று சொல்லும் சிமென்ட் உறை தயாரிக்கும் தொழிலை நான் தைரியமாக எடுத்து செய்து வருகிறேன். இப்போது மாதம், 50,000 ரூபாய் சம்பாதிக்கிறேன்.
எல்லா பெண்களும் சொந்த காலில் நிற்க கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எது நம்மை கைவிட்டாலும், நம் உழைப்பு கைவிடாது!
மேலும்
-
திண்டுக்கல்- – மதுரை ரோட்டில் விபத்து அபாயம் வெள்ளைக்கோடு அமைப்பதில் தாமதத்தால்...
-
பிரிட்டனில் பிரதமர் தற்காலிகம்; 'லேரி' பூனை நிரந்தரம்
-
தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
-
அதே சைகையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்!
-
குடிநீர், அடிப்படை வசதிகள் கேட்டு மறியல், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
-
யார் நக்கல், நையாண்டி செய்தாலும் எனக்கு கவலையில்லை; முதல்வர் விஜய் பேச்சு