திண்டுக்கல்- - மதுரை ரோட்டில் விபத்து அபாயம்: வெள்ளைக்கோடு அமைப்பதில் தாமதத்தால்...

சின்னாளபட்டி;திண்டுக்கல் - மதுரை ரோடு சீரமைப்பு பணியில் வெள்ளைக்கோடு அமைப்பதில் தாமதம் காரணமாக விபத்து அபாயம் நீடிக்கிறது.

2011ல் செயல்பாட்டிற்கு வந்த நான்கு வழிச்சாலையில் மின்விளக்குகள், பஸ் ஸ்டாப் நிழற்கூரை, தண்ணீர் தொட்டி, கண்காணிப்பு உயர்கோபுர கேமராக்கள், சென்டர்மீடியன் செடிகள் பராமரிப்பு போன்றவற்றின் பராமரிப்பு பெயரளவில் மட்டுமே உள்ளது. பல வசதிகள் பயன்படுத்த முடியாத சூழலில் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளன.

சில நாட்களாக முன்னறிவிப்பின்றி வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் ரோடு பராமரிப்பு பணி நடக்கிறது. நான்கு வழிச்சாலை என்பதால் அதிக வேகத்தில் வரும் வாகனங்கள் பிற வாகனங்களை முந்தி செல்ல முயலும் போது பராமரிப்பிற்காக அமைத்துள்ள சிவப்பு கர்டர்கள், வேகத்தடுப்புகள் வாகன ஓட்டிகளை நிலைகுலைய செய்கின்றன.

கடந்த மாதம் பெருமாள்கோவில்பட்டியில் இருந்து திண்டுக்கல் வரை 20 கி.மீ., தொலைவிற்கு ரோடு (மதுரை - -திண்டுக்கல் வழித்தடம்) சீரமைப்பு பணி நடந்தது. அதன்பின் பல நாட்களாக ரோட்டோர, நடு, சந்திப்பு பகுதியில் தெர்மோ பிளாஸ்டிக் மார்க் (வெள்ளை நிறக்கோடு) பணி நடக்கவில்லை.

அதிவேக வாகனங்கள் முந்திச் செல்லும் போதும், இரவு நேரங்களிலும் ரோடு விளிம்பு பகுதியை கணிக்க முடியாமல் விபத்துக்குள்ளாகின. தினமலர் நாளிதழில் செய்தி வெளியான பின் இப்பணி நடந்தது.

கடந்த வாரம் திண்டுக்கல் -கொடைரோடு இடையே சீரமைப்பு பணி துவங்கியது. 5 நாட்களாகியும் வெள்ளைக்கோடு அமைக்கவில்லை. அவ்வப்போது சாரல் மழை பெய்யும் நிலையில் மீண்டும் வாகன விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது.

நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நெரிசல், விபத்துகளை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.

Advertisement