பராமரிப்பில்லாத ஊரணி நடைபாதை

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரணிகளில் மேம்பாடு பணி செய்து பேவர் பிளாக் நடைபாதை அமைத்துள்ளனர். இதில் நடைபயிற்சி மேற்கொள்வோர் இந்த நடைபாதைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை தாலுகா அலுவலகம் அருகே உள்ள செட்டி ஊரணியை நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1.60 கோடி மதிப்பில் சுத்தம் செய்து, துார்வாரி கரை அமைத்து கரையின் மீது தடுப்பு சுவர் அமைத்து பேவர் பிளாக் நடை பாதை அமைத்தனர். கரையை சுற்றி வேலி அமைத்து நடை பாதையில் இருக்கை, கைபிடி அமைத்துள்ளனர். பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு வந்து 4 ஆண்டு கடந்துள்ளது.

இந்த பகுதியில் உள்ள முதியோர், பெண்கள் இந்த நடைபாதையில் காலை மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்த நடைபாதையின் ஓரங்களில் தற்போது செடிகள் முளைத்துள்ளது. மாலை நேரத்தில் விஷ பூச்சிகளின் தொந்தரவு உள்ளது. எனவே நடைபாதையில் உள்ள செடிகளை அகற்றி சுத்தம் செய்து இரவு நேரத்தில் நடைபாதையில் மின் விளக்குகள் எரிவதற்கு நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் தினசரி சந்தை அருகே செக்கடி ஊரணியையும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1.34 கோடியில் மேம்பாட்டு பணி செய்தனர். இந்த ஊரணியிலும் பேவர் பிளாக் நடை பாதை அமைத்து வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதிலும் நடைபாதையில் முளைத்துள்ள செடிகளை சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நடை பயிற்சி மேற்கொள்வோர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement