இந்திய வங்கிக்கு ரூ.100 கோடி செலுத்த வேண்டும்; நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு

3

லண்டன்: இந்திய வங்கியிடம் வாங்கிய கடனை, அதற்கான வட்டியுடன் சேர்த்து ரூ.100 கோடி செலுத்த பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள நகை வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நகை வியாபாரி நீரவ் மோடி, கடந்த 2012ம் ஆண்டில் துபாயில் உள்ள தனது 'ஃபயர்ஸ்டார் டைமண்ட் எப்இசட்இ' என்ற நிறுவனத்திற்கு இந்திய வங்கியிடம் சுமார் ரூ.38.9 கோடி கடன் பெற்றிருந்தார். தனது நிறுவனம் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், அதைத் தனிப்பட்ட முறையில் தானே செலுத்துவதாக நிரவ் மோடி ஒரு தனிப்பட்ட உத்தரவாதப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தார்.

கடந்த 2018ல் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடிப் புகார் வெளிச்சத்திற்கு வந்ததும், இந்திய வங்கி தனது கடனைத் திரும்பக் கோரியது. ஆனால், அந்த நிறுவனமோ அல்லது நிரவ் மோடியோ பணத்தைத் திருப்பிச் செலுத்தாததால், அந்தத் தனிப்பட்ட உத்தரவாதத்தை அமல்படுத்தக் கோரி வங்கியின் சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, தான் இந்தியாவில் இல்லாததால், வங்கி அனுப்பிய கடன் மறுசீரமைப்பு அல்லது திருப்பிச் செலுத்துவதற்கான முறையான அறிவிப்புகள் தனக்குக் கிடைக்கவில்லை என்று நீர்வ் மோடி வாதிட்டார். ஆனால், அவர் அடைக்கப்பட்டுள்ள லண்டன் சிறைக்கும், அவருடைய வழக்கறிஞர் குழுவிற்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவரது வாதத்தை நிராகரித்தது.

மேலும், நீரவ் மோடியிடம் முறையான சட்டப்பூர்வ பாதுகாப்பு வாதங்கள் எதுவும் இல்லாததால், அசல் கடன் தொகையான ரூ.38.9 கோடியுடன், அதற்கான வட்டியையும் சேர்த்து சுமார் ரூ. 100 கோடிக்கும் மேலான தொகையை இந்திய வங்கிக்கு செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement