போலீசாரை ஏவி அச்சுறுத்தலை திமுக வேடிக்கை பார்க்காது; சொல்கிறார் உதயநிதி

8

சென்னை:போலீசாரை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால் திமுக அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: திமுகவின் GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து போலீசார் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி மீது தவெக ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது. திமுக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும், அரசையும் எதிர்த்து பேசினால் போலீசாரை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் தவெகவினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற சோபா மாடல் அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள். திமுக இளைஞர்களை போலீசாரை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால் திமுக அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.

Advertisement