கோவிலுார் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் தவிப்பு

வேடசந்துார், ஜூன் 25

கோவிலுார் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால் மழை, வெயிலில் பயணிகள் தவித்து வருகின்றனர்.

கோவிலுார் ஊராட்சி கோவிலுாரின் மையப்பகுதியில் திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு வந்து தான் சுற்றியுள்ள நல்லுார், ரத்தினகிரியூர், தங்கச்சியம்மாபட்டி, ராமநாதபுரம், சக்தி நகர், ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி மக்கள் திண்டுக்கல், கரூர் நகர பகுதிகளுக்கு செல்கின்றனர். கோவிலுாரில் வாரச்சந்தை நடக்கும் சனிக்கிழமை அன்று தெற்கு, வடக்கு பகுதியை சேர்ந்த மக்கள் பஸ்களில் வந்து செல்கின்றனர்.

ஆனால் இதுவரை கரூர் செல்லும் பஸ் ஸ்டாப், திண்டுக்கல் செல்லும் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைக்கவில்லை.‌ இதனால் பயணிகள் ஒதுங்கக்கூட இடமில்லாமல் மழை, வெயிலில் நின்று அவதிப்படும் நிலை உள்ளது.

இங்கு பொது இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.‌ அருகில் உள்ள எரியோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இருபுறங்களிலும் பஸ் ஸ்டாப் அமைத்துள்ள நிலையில் கோவிலுார் மெயின் ரோடு பஸ் ஸ்டாப்பில் மட்டும் பயணிகள் நிழற்குடை அமைக்கவில்லை.

எனவே பயணிகள் நலன் கருதி ரோட்டின் இருபுறங்களிலும் பயணிகள் நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

Advertisement