தமிழறிஞர்கள் 50 பேரை கவுரவித்த விஜயேந்திரர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரமடத்தில், சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தமிழ் புலவர்கள், புரவலர்கள் 50 பேருக்கு 'திருக்குறள் உரைக்கோவை - அறத்துப்பால்' நுால் வழங்கி கவுரவித்தார்.

காஞ்சிபுரம் சங்கரமடம் சார்பில், 'திருக்குறள் உரைக்கோவை -- அறத்துப்பால்' என்ற நுால் 2,800 பக்கங்களில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. வித்வான் புலவர் மகாதேவன் தொகுத்தளித்த இந்நுாலை தமிழறிஞர்களுக்கும் கல்வியாளர்களுக்கும், புரவலர்களுக்கும் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் இயக்குநர் விஜயராகவன், மயிலம் தமிழ் கல்லுாரி முன்னாள் முதல்வர் சற்குணம், திருவையாறு அரசர் கல்லுாரி பேராசிரியர் திருஞானசம்பந்தன், தஞ்சை பல்கலை பேராசிரியர் நல்லசிவம் உள்ளிட்ட 50 தமிழறிஞர்களின், தமிழ்ப்பணிகளை குறிப்பிட்டு கவுரவிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் உலகபொதுமறை திருக்குறள் பேரவை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய அமைப்புகள் சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவக் கல்லுாரி உள்ளிட்ட பல்வேறு பள்ளி, கல்லுாரி தாளாளர்கள், முதல்வர்கள், தமிழாசிரியர்கள் பலருக்கும், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 'திருக்குறள் உரைக்கோவை - அறத்துப்பால்' நுாலை வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் வரவேற்றார். தமிழ் துறை தலைவர் ராதாகிருஷ்ணன் சங்கர மடத்தின் தமிழ் பணிகளைப் பட்டியலிட்டார்.

எஸ்.எஸ்.கே.வி கல்விக் குழுமங்களின் தாளாளர் வி.கே. ராமன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சங்கரா கல்லுாரியில் இயங்கும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெய்வத்தமிழ் இருக்கை ஏற்பாடு செய்திருந்தது.

Advertisement