ரவுடிகள் கண்காணிப்பு: 6 பேர் கைது

கோவை: கோவை மாநகர போலீசார் நடத்திய, சிறப்பு அதிரடி சோதனையில் ஆறு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், 909 பேர் உள்ளனர். இவர்களின் செயல்பாடுகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜூன் 27 மாலை 6:00 மணி முதல் ஜூன் 28 அதிகாலை 6:00 மணி வரை ஒருங்கிணைந்த சோதனை நடந்தது.

இதில், 48 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. அதில், 25 பேர் விசாரணைக்கு அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பட்டியலில் உள்ள பிற குற்றவாளிகள் 47 பேர் கண்காணிக்கப்பட்டு, 37 பேர் விசாரணைக்கு அழைத்துவரப்பட்டனர். அதில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இச்சோதனையின்போது, 2.36 கிலோ கஞ்சா, 28 போதை மாத்திரைகள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement