பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்க கொ.ம.தே.க., கோரிக்கை

நாமக்கல்:கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:
கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு, 70.71 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் நிலையில், இன்று தலைநகர் டில்லியில், பெட்ரோல் ஒரு லிட்டர், 102.12 ரூபாயாகவும், டீசல் ஒரு லிட்டர், 95.20 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இது மட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தபோது, வணிக பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி., காஸ் சிலிண்டர் விலை, இரண்டரை மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டது. இப்போது நிலைமை சீரான நிலையில், விலை குறைப்பு பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லாததால், வணிக நிறுவனங்களும், பொதுமக்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால், பொதுத்துறை ஆயில் நிறுவனங்கள் அதிகளவில் லாபம் சம்பாதிக்கின்றன. எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதுடன், எல்.பி.ஜி., வணிக பயன்பாடு மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சிலிண்டர் விலையையும் உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement