பதிவு செய்யாமல் ஏலச்சீட்டு நடத்தினால் நடவடிக்கை பாயும்: அமைச்சர் எச்சரிக்கை

நாமக்கல்:''தமிழகத்தில் பதிவு செய்யாமல் ஏலச்சீட்டு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சிட்பண்ட்ஸ் அசோசியேசன் மற்றும் சேலம் சிட்பண்ட்ஸ் அசோசியேசன் சார்பில், மத்திய அரசு அறிவித்துள்ள, 2025-30ம் ஆண்டிற்கான, அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவைக்கான தேசிய செயல்திட்டம் குறித்த கருத்தரங்கு, நாமக்கல்லில் நடந்தது. சிட்பண்ட் அசோசியேசன் மாநில தலைவர் சிற்றரசு தலைமை வகித்தார். நாமக்கல் எம்.எல்.ஏ., திலீப், சேலம் சிட்பண்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது:
சீட்டுகளில் சேர்ந்து பணம் சேமித்து அந்த பணத்தை திரும்பப்பெறும்போது, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டி உள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சிட்பண்ட்டில் சேமிக்கும் பணத்திற்கு ஜி.எஸ்.டி., வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுள்ளீர்கள்.
இதுகுறித்து, தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்து, மத்திய நிதியமைச்சகத்திற்கும், ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கும் பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்படும். பதிவு செய்யாத சீட்டு கம்பெனிகள், பொதுமக்களிடம் சீட்டு பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. எனவே, பதிவு செய்யாமல் சீட்டு நடத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து சிட்பண்ட் சங்கத்தினர் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement