இடிந்து விழுந்த பள்ளி சமையலறை கட்டடம்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 140க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 1960களில் கட்டிய பள்ளி வளாக ஓட்டுக் கட்டடத்தில் மாணவர்களுக்கான வகுப்பறைகள் மற்றும் சமையல் கூடம் இருந்தது. இதில் சத்துணவு சமையல் அமைப்பாளர், உதவியாளர்கள் சமைத்து மணியாற்றி வந்தனர்.

பழுதடைந்த இப்பள்ளியின் ஓட்டுக் கட்டடம் குறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய, மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தியும் பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் பள்ளி விடுமுறை நாளான நேற்று காலை ஓட்டுக் கட்டடம் திடீரென இடிந்து அறையின் உட்புறமாக விழுந்தது. விடுமுறை நாள் என்பதால் விபரீதம் நடக்கவில்லை. இதில் வகுப்பறை கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கட்டடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement