பைக்கிலிருந்து தவறி விழுந்த தனியார் ஊழியர் உயிரிழப்பு

புல்லரம்பாக்கம்: புல்லரம்பாக்கத்தில், பைக்கில் சென்ற தனியார் நிறுவன ஊழியர், நிலைதடுமாறி கீழே விழுந்து பலியானார்.

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் உள்ள பூண்டி ஏரி கால்வாயில், நேற்று முன்தினம் மாலை ஒருவர் இறந்து கிடப்பதாக, புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்.

விசாரணைக்கு பின் போலீசார் கூறியதாவது:

இறந்து கிடந்த வாலிபர், ஊத்துக்கோட்டை டி.பி.புரம் பகுதியைச் சேர்ந்த சண்முகம், 24.

ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், கடந்த 27ம் தேதி, தன் உறவினர் திருமலை என்பவரிடம் ‘ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ்’ இரு சக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு, இரவுப்பணிக்கு சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை, பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, பூண்டி ஏரியின் கரை பகுதியில் உள்ள கால்வாயில், இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில், கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சண்முகத்தின் தாய் மல்லிகா, நேற்று கொடுத்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement