அரசு பஸ்கள் 'டிரிப் கட்': மலைப்பகுதி மக்கள் அவதி

கொடைக்கானல்:கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அடிக்கடி அரசு பஸ்கள் 'டிரிப் கட்' செய்யப்படுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இம்மலைப்பகுதிக்கு வத்தலக்குண்டு அரசு பணிமனை மூலம் பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் மலைப்பகுதியில் பழுதான பஸ்களுக்கு மாற்றாக புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் அடிக்கடி பஸ்கள் பழுதாகி பாதி வழியில் நிற்கும் நிலை தொடர்கிறது.

சில தினங்களாக தாண்டிக்குடி மலைப்பகுதிக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் டிரிப் கட் செய்யப்படுகின்றன. கொடைக்கானலுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் இழுவைத்திறன், இயந்திர கோளாறால் பழுதாகின.

இதையடுத்து பழைய பஸ்கள் மாற்றி விடப்பட்டும் டிரைவர், கன்டக்டர்கள் போதிய அளவில் இல்லாததால் மலைப்பகுதியில் 'டிரிப் கட்' செய்யப்படுவது தொடர்கிறது. பழுதான பஸ்கள் சரி செய்யப்படாமல் தரைப்பகுதியில் இயக்கும் அவலமும் உள்ளது.

மலைப்பகுதியில் தனியார் பஸ் சேவை குறைவு என்ற நிலையில் முழுமையாக அரசு பஸ் சேவை அவசியமாகிறது. பணியாளர் பற்றாக்குறை, பழுது சரி செய்ய தேவையான உதிரிபாகங்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement