கீரை சாகுபடியில் ஓராண்டு லாபம் ரூ.11.20 லட்சம்!

தென்னந்தோப்பில் ஊடுபயிராக, பலவகையான கீரைகளை சாகுபடி செய்து நிறைவான லாபம் ஈட்டும், கோவை, நவக்கரை கிராமத்தை சேர்ந்த, 52 வயதாகும் விவசாயி கந்தசாமி:

நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். விவசாயம் மீது ஆர்வம் வந்ததால், ஏழு ஆண்டுகளுக்கு முன் வேலையை விட்டுவிட்டு, இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன்.

என்னிடம், 7.5 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில், 5 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. ஒரு ஏக்கரில் ஆடு, மாடுகளுக்கான பசுந்தீவனம் வளர்க்கிறேன். மீதி நிலத்தில் வீடு, ஆட்டு கொட்டகை, மாட்டு கொட்டகை, ஆழ்துளை கிணறு அமைத்துள்ளேன்.

என்னை, 'கீரை கந்தசாமி' என்று சொன்னால் தான் இந்த ஏரியாவில் தெரியும். அந்தளவுக்கு என்னை பிரபலம் ஆக்கியது கீரை வியாபாரம். தென்னந்தோப்பில் ஊடுபயிராக பல வகை கீரைகளை பயிர் செய்கிறேன். விதைத்த 20 நாட்களிலேயே வருமானம் பார்க்க ஆரம்பித்து விடலாம்; முதலீடும், பராமரிப்பும் குறைவு.

இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்தி தான் கீரை சாகுபடி செய்கிறேன். சரியாக திட்டமிட்டு, சுழற்சி முறையில் கீரை சாகுபடி செய்து வருவதால், தினமும் வருமானம் கிடைக்கிறது. கீரைகளுக்கு போடும் இடுபொருட்களே, தென்னைக்கும் போதுமானதாக இருக்கிறது. தென்னையிலும் நல்ல விளைச்சல் கிடைக்கிறது.

இயற்கை முறை சாகுபடி என்பதால் மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. தற்போது, 500க்கும் மேற்பட்ட நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர். கீரைகளை அறுவடை செய்த மூன்று மணி நேரத்திற்குள், வாடிக்கையாளர்கள் கையில் சேர்த்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

பணியாளர்கள் வாயிலாக தினமும் 15 கி.மீ., துாரம் வரை பயணித்து,வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே சென்று கீரைகளை கொடுக்கிறோம். எங்கள் ஊர் கேரள எல்லையில் இருப்பதால், பாலக்காட்டிலும் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். இதனால், கீரைகள் விற்பனையாகாமல் தேங்குவதில்லை; நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

தினமும் 400 கீரை கட்டுகள் வீதம், ஏழு நாள் அறுவடையில் மொத்தம், 2,800 கட்டுகள் கிடைக்கும். ஒரு கட்டு 20 ரூபாய் என்று விற்பனை செய்கிறேன். ஓராண்டில் சுழற்சி முறையில், எட்டு முறை கீரை சாகுபடி செய்யலாம். அந்த வகையில் எல்லா செலவும் போக, ஆண்டுக்கு 11.20 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.

தொடர்புக்கு: 98940 35608.

Advertisement