பெங்களூரு கல்குவாரியில் பாறை சரிந்தது: பீஹார் தொழிலாளர்கள் 7 பேர் பலி

5


பெங்களூரு: கர்நாடகாவில் கல்குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்த விபத்தில், பீஹாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூரு தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட மடப்பட்டணா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கல்குவாரியில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. புதிய கிரஷர் இயந்திரம் அமைப்பதற்காக, தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்கு மேலே சுமார் 100 அடி உயரத்தில் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் கற்களை அகற்றும் பணி நடந்தது.

அப்போது, எதிர்பாராத விதமாக ராட்சத பாறை உருண்டு, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளது. இந்த விபத்து நடந்த நேரத்தில் சுமார் 15 முதல் 20 தொழிலாளர்கள் அங்குப் பணியாற்றி வந்துள்ளனர். இதில், 7 பேர் பாறைக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும், மீட்புப் படையினரும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பலர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், வேறு யாராவது இடிபாடுகளில் சிக்கியுள்ளார்களா எனத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக, அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் டிகே சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement