சம்பளம் வரவில்லை ஊழியர்கள் தவிப்பு

கோவை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சமுதாய அமைப்பாளர்கள் சிறப்பு ஊதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்தல், வங்கிக் கடன் பெற்றுத் தருதல், சுயதொழில் பயிற்சிகளை ஒருங்கிணைத்தல், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கணக்கெடுப்புப் பணிகளை செய்து வருகின்றனர்.

நகர்ப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தில், இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலம் முழுவதும் உதவி திட்ட அலுவலர்கள், உதவி அலுவலர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், சமுதாய அமைப்பாளர்கள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

பணியின் தன்மைக்கு ஏற்ப மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், திட்டப் பணிகளில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் முதல் கட்ட திட்டம் நிறைவடைந்து, தற்போது 2.0 திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை பழைய திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்தே ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. புதிய திட்டத்துக்கான நிதி இன்னும் விடுவிக்கப்படாததால், ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

Advertisement