சைபர் குற்றங்களில் துரித நடவடிக்கை: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

2

மதுரை: தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண், வெளிநாட்டு வேலைக்கு சென்றார். சமூக வலைதள கணக்குகள் வழியாக, அவரது போட்டோக்களை, 'மார்பிங்' செய்து ஆபாச வீடியோக்களை ஒருவர் பதிவிட்டு பரப்பினார்.

அதை நீக்க வேண்டுமெனில் பணம் தர வேண்டும் என மிரட்டினார். பெண்ணின் சகோதரர் போலீசில் புகார் அளித்தார். நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு:




சைபர் குற்றங்களில் நடவடிக்கை தாமதம் பேராபத்தாகிறது. மின்னணு தடயங்கள் எளிதில் அழிந்துவிடக்கூடியவை. இணைய முகவரிகள் மறைந்துவிடலாம். பயனர் கணக்குகள் நீக்கப்பட்டுவிடலாம். ஐ.பி., பதிவுகள் மேலெழுதப்பட்டு அழிந்துவிடலாம்.

டிஜி ட்டல் சான்றுகளை உடனடியாக பாதுகாப்பது வெறும் நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல; அது உண்மையான மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான இன்றியமையாத தேவை .

'மார்பிங்' ஒருவரின் தனிப்பட்ட உரிமை, நற்பெயர் மற்றும் மனரீதியான பாதுகாப்பின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல். சட்டவிரோதமான அந்த உள்ளடக்கம் எவ்வளவு வேகத்தில் பரவுகிறதோ, அதே வேகத்தில் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

புகாரில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில், சம்ந்தப்பட்ட போலீசார் வழக்கு பதிய வேண்டும். 'மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச பதிவுகளை இணையத்திலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement