வெனிசுலாவில் அதிசயம்; நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்கியவர் 8 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

லா குவைரா: வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உண்டான இடிபாடுகளில் சிக்கிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் 8 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 24ம் தேதி வடமேற்கு வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த் இரட்டை நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்தன. இதில், 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 11,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.உலக நாடுகளின் உதவியுடன் கடந்த இரு வாரங்களாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்த நிலையில், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய 43 வயது பாதுகாப்பு அதிகாரி ஒருவர், 150 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மீட்பு பணிகளுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான லா குவைரா கடலோரப் பகுதியில் உள்ள கலேரியாஸ் பிளாயா கிராண்டே வணிக வளாகத்தின் அடித்தள இடிபாடுகளுக்குள் ஹெர்னான் ஆல்பெர்டோ கில் புளோரஸ் என்ற அதிகாரி சிக்கியிருந்தார். பலத்த மழை மற்றும் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள் போன்ற சவாலான சூழலுக்கு மத்தியிலும், மீட்பு படையினரின் விடாமுயற்சியால் அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

அவரை ஆம்புலன்ஸை நோக்கி அழைத்து வரப்பட்டபோது, உலக நாடுகளின் கொடிகளை ஏந்தியிருந்த மீட்புக் குழுவினர் மற்றும் திரண்டிருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisement