தேங்கி நிற்கும் கழிவுநீர்  கண்டு கொள்ளாத மாநகராட்சி 

 கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனை அருகில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

கடலுார் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் உள் நோயாளியாகவும், வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனை அருகில் கருமாரியம்மன் கோவில் உள்ளது.

இதன் அருகில்  கால்வாயில் குப்பைகளை அகற்றாததால் சாலையோரம் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. 

இதில், அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்துக்கு பிரதானமான இந்த சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மருத்துவமனை அருகிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது கழிவுநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Advertisement