300 சொகுசு ஹோட்டல்களில் தங்கி மோசடி: தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிஷாவில் கைது

3

ராய்பூர்: நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் தங்கி, மோசடியில் ஈடுபட்ட 60 வயது முதியவர் ஒடிஷாவில் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

ஒடிஷா மாநிலம், ராய்பூரில் பிரபல நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இங்கு முதியவர் பிங்சன்ஜான்(60) என்பவர் அறை எடுத்து தங்கி உள்ளார். ஹோட்டலின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்திய முதியவர், அங்குள்ள விலை உயர்ந்த பொருட்களை தனதாக்கிக் கொண்டு, அறை வாடகையான ரூ. 63,700யும் கொடுக்காமல் தப்பிச் சென்றுவிட்டார்.

தப்பிச் செல்லும் போது ஹோட்டல் நிர்வாகத்திடம் பயன்படுத்த வாங்கியிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்பையும் எடுத்துச் சென்றிருக்கிறார். இதுகுறித்து போலீசில் ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

வழக்குப்பதிந்த போலீசார் புவனேஸ்வரில் பதுங்கியிருந்த பிங்சன் ஜானை கைது செய்தனர். விசாரணையில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களில் இது போல் அறை எடுத்து, அனைத்து வசதிகளையும் பயன்படுத்திவிட்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்து தப்பியவர் என்பது தெரிய வந்தது.

1996ம் ஆண்டு முதன் முதலில் கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அன்று முதல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் 15 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

சிக்கிய பிங்சன் ஜானின் பூர்வீகம் தமிழகம் என்பதும், பிரபல மோசடி மன்னன் சார்லஸ் சோப்ராஜால் ஈர்க்கப்பட்டு, விதவிதமான திருட்டில் ஈடுபட்டு உள்ளார். சுற்றுலா வழிகாட்டி, தொழிலதிபர், ஆங்கிலம் மற்றும் யோகா ஆசிரியர் என்று கூறி அறைகளை எடுத்து தங்குவது இவரது பாணி.

Advertisement