சார் – பதிவாளர் அலுவலகம் மாற்றம் பத்திரப்பதிவு எழுத்தர்கள் எதிர்ப்பு

திருவள்ளூர், ஜூலை 4–

‘திருவள்ளூர் சார் – பதிவாளர் இரண்டாம் பிரிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கூடாது’ என, பத்திரப்பதிவு எழுத்தர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருவள்ளூர் சார் – பதிவாளர் அலுவலகம், இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகிறது. பத்திரப்பதிவு, திருமண பதிவு உள்ளிட்ட பதிவுகள் அதிகரித்ததால், கடந்த ஆண்டு, பெருமாள்பட்டு பகுதியை தலைமையிடமாக கொண்டு, சார் – பதிவாளர் அலுவலகம் பிரிக்கப்பட்டது. அந்த பிரிவு அலுவலகமும், தற்போது திருவள்ளூர் சார் – பதிவாளர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.

ஒரே இடத்தில், இரண்டு பிரிவு அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, சார் – பதிவாளர் – 2 அலுவலகத்தை, செவ்வாப்பேட்டைக்கு இடமாற்றம் செய்ய, பத்திரப்பதிவு துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் பத்திரப்பதிவு எழுத்தர்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூர் 2ம் எண் சார் – பதிவாளர் அலுவலகத்தை, தனியார் கட்டடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டாம். அதற்குப் பதிலாக, திருவள்ளூர் நகரிலேயே, அனைத்து சார் – பதிவாளர் அலுவலகங்களையும் ஒருங்கிணைத்து, நிரந்தர பதிவுத்துறை வளாகம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement