சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையம் துவக்கம்

காஞ்சிபுரம்: பழமையான கோவில்கள் அதிகம் நிறைந்த காஞ்சிபுரத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.



காஞ்சிபுரம் மாவட்டம், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சைவ, வைணவ மற்றும் பிற சமயக் கோவில்களைக் கொண்ட ஆன்மிக மையமாக விளங்குகிறது.

இக்கோவில்களில் பல அரிய கற்சிலைகள், பஞ்சலோக உற்சவ மூர்த்திகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருள் மதிப்புடைய சிலைகள் உள்ளன.

இவற்றின் பாதுகாப்பு தொடர்பாக நீண்ட காலமாக கூடுதல் கண்காணிப்பு தேவை என்ற கோரிக்கை இருந்து வந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாயமான சிலைகள் பற்றி, பல்வேறு வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.



இதுவரை சிலை திருட்டு, பழமையான சிலைகள் மாயம், கோவில் சொத்துகள் தொடர்பான புகார்கள் அனைத்தும் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்தின் மூலம் மட்டுமே விசாரிக்கப்பட்டு வந்தன.

இதனால் புகார் அளிப்பதிலும், விசாரணை மேற்கொள்வதிலும் காலதாமதம் ஏற்படுவதாக பக்தர்களும் அறநிலையத் துறை நிர்வாகிகளும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் தனியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் திருவீதிபள்ளம் பகுதியில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையம் அருகே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையம் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளது.



இதன்மூலம், கோவில்களில் சிலைகள் தொடர்பாக ஏதேனும் திருட்டு, கடத்தல் முயற்சி அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் நேரடியாக புகார் அளிக்க முடியும். இது, பக்தர்களுக்கு கூடுதல் வசதியாக அமைந்துள்ளது.





Advertisement