மலைவாழ் மக்கள் பயன்பெற அரசு பஸ்களுக்கு எதிர்பார்ப்பு

குன்னூர்:நீலகிரியில் பஸ்கள் நாட்டுடமையாக்கப்பட்டதால், அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. மினி பஸ் திட்டம் அறிமுகப்படுத்திய பிறகு, கிராமங்களுக்கு மினி பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பெரும்பாலும் நகர பகுதிகளில் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது.

சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மினி பஸ்கள் கட்டணம் உயர்த்தியது. 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை தூரத்திற்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. இது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறுகையில், அரசு பஸ்களில் கட்டணமில்லாமல் ஒருசாரார் பயணித்து பயனடையும் போது, அரசு பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளதால், மினி பஸ்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஒரு சாரார் ஆளாக்கப்படுவது மக்களுக்கு இழைக்கும் அநீதி. கடந்த காலங்களில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய அரசு விரிவான ஆய்வு மேற்கொண்டு மினி பஸ்கள் இயக்கத்தை முறைப்படுத்தி மக்களை சுரண்டலில் இருந்து காக்க வேண்டும். மாவட்ட புவியியல் அமைப்பு மற்றும் மக்களின் வாழ்க்கை முறைக்கு மினி பஸ் இயக்கம் ரத்து செய்து, ஏழை எளிய மலைவாழ் மக்கள் பயனடையும் வகையில் அரசு மினி பஸ்கள் மட்டும் இயக்க வட்டார போக்குவரத்து அலுவலருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது., என்றார்.

Advertisement