'டாஸ்மாக்' ஊழியர்கள் 8 பேர் 'சஸ்பெண்ட்'

குன்றத்துார்: படப்பை அருகே 'டாஸ்மாக்' கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பணம் வசூல் செய்த ஊழியர்கள், 8 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை, ஆதனஞ்சேரியில் அரசு 'டாஸ்மாக்' கடை செயல்படுகிறது. இந்த கடையில் பீர் மற்றும் குவார்ட்டர் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

இது குறித்து மது வாங்க சென்ற ஒருவர், 'கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது என அரசு அறிவித்தும், நீங்கள் ஏன் கூடுதலாக பணம் வாங்குகிறீர்கள்' என ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு, 'அரசு எங்களுக்கு அப்படி எந்த அறிவிப்பும் சொல்லவில்லை' என, ஊழியர்கள் அலட்சியமாக பதில் அளித்தனர்.

இந்த வீடியோ, நேற்று சமூக வலைதளத்தில் பரவியது. இந்த விவகாரம் 'டாஸ்மாக்' நிர்வாகத்திற்கு தெரியவர, அந்த கடையில் பணியாற்றிய எட்டு ஊழியர்களை 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது.

Advertisement