மதுபோதையில் ஏற்பட்ட தகராறு தொழிலாளி கொலையில் முடிந்தது: விழுப்புரம் அருகே 2 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மதுபோதை ஏற்பட்ட தகராறில் ஜே.சி.பி., ஆபரேட்டரை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த மாதிரிமங்கலம் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, 56; ஜே.சி.பி., ஆபரேட்டர். எரிச்சனாம்பாளையத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து, 33; லாரி டிரைவர். நண்பர்கள். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவதும் வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு மாதிரிமங்கலம் சமுதாயக்கூடம் அருகே இருவரும் மது அருந்தினர்.

அப்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மூர்த்தியின் உறவினரான வினோத்துக்கும், வீரமுத்துவிற்கும் இடையே போதையில் தகராறு ஏற்பட்டது.

தகராறை மூர்த்தி விலக்கி விட்டார். மூர்த்தி, தனக்கு ஆதரவு தராததால் ஆத்திரமடைந்த வீரமுத்து, சிறுவள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த தனது நண்பரான கொத்தனார் வேலை செய்யும் முருகன் மகன் மோகன்ராஜ், 25; என்பவரை மொபைல் போனில் பேசி அங்கு வரவழைத்துள்ளார்.

அங்கு வந்த மோகன்ராஜ், வீரமுத்துவுடன் சேர்ந்து, தனியாக இருந்த மூர்த்தியை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பினர்.

தகவல் அறிந்த விழுப்புரம் டவுன் போலீசார், மூர்த்தியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து மூர்த்தியின் மனைவி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில், வீரமுத்து, 33; மோகன்ராஜ், 25; ஆகியோர் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு பிரிவுகளில், போலீசார் வழக்குப் பதிந்து நேற்று இருவரையும் கைது செய்தனர்.

Advertisement