த.வெ.க., அரசு விரைவிலேயே கவிழும் :அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆருடம்

திண்டிவனம்: 'த.வெ.க., ஆட்சியில் அமைச்சர்கள்தான் ரீல்ஸ் போடுகிறார்கள் என்றால் முதல்வரும் ரீல்ஸ் போடுகிறார்' என அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் பேசினார்.

திண்டிவனத்தில் நடந்த அ.தி.மு.க., நகர செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் முகமதுெஷரீப் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி பேசியதாவது:

தற்போதுள்ள த.வெ.க., ஆட்சியில் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை அரசு வழக்கறிஞராக நியமித்துள்ளனர். தாம்பரம் மருத்துவமனைக்கு முதல்வர் விஜய் ஆய்விற்காக செல்கிறார் என்று மக்கள் நினைத்தனர்.

ஆனால் அவர் மருத்துவனையில் உள்ள குழந்தைகளை கொஞ்சி, முத்தம் கொடுக்கிறார். இதை ரீல்ஸ் போடுகின்றனர். த.வெ.க., ஆட்சியில் அமைச்சர்கள்தான் ரீல்ஸ் போடுகிறார்கள் என்றால், முதல்வரும் ரீல்ஸ் போடுகிறார்.

முதல்வர் சினிமாவில் நடித்தது போல், ஆட்சியில் நடிக்கிறார். ஊழலை ஒழிப்பேன் என்று கூறிய விஜய் ஆட்சியில் ஊழல் அதிகமாகிவிட்டது. கற்பழிப்பு, கொலை நடக்கிறது. த.வெ.க., அரசு எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கலாம் என்ற கெட்ட நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த அரசு விரைவிலே கவிழும்.

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு அரசு உதவி கொடுப்பதும் தவறு. சி.பி.ஐ.,விசாரணையின் போது, எப்படி சாட்சிகளுக்கு அரசு சலுகை வழங்கலாம். விஜய் ஒரு சந்தர்ப்பவாதி. கரூருக்கு இடைத்தேர்தல் வருவதால் பிரசாரத்திற்காக செல்கிறார்.

இவ்வாறு பசுபதி பேசினார்.

கூட்டத்தில், மயிலம் தொகுதி வழக்கறிஞர் அணி செயலாளர் சம்பத், நகர நிர்வாகிகள் ராஜேந்திரன், வினோத், வீரா, முத்து, பாரதிதாசன், மஸ்தான், ஜனா, முருகன், செந்தில், சந்தியா, சிவகாமி, கஜேந்திரன், முருகானந்தம், சீனு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement