மாணவர்கள் எண்ணிக்கை சரிவு :மூடுவிழா காணும் அரசு பள்ளிகள்

வால்பாறை: வால்பாறையில், பல்வேறு காரணங்களால் தொழிலாளர்கள் வெளியேறுவதால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வருகிறது.

வால்பாறையில், 50க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. கடந்த, 2001ம் ஆண்டில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தினக்கூலி 76.85 ரூபாய் குறைக்கப்பட்டு, 72 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. குறைந்த சம்பளம் வழங்கியதாலும், மனித - வனவிலங்கு மோதல் அதிகரிப்பாலும், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில்நகரங்களுக்கு தொழிலாளர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இதனால், இங்குள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ள நிலையில், பெரும்பாலான பள்ளிகள் மூடும் அபாயத்தில் உள்ளன.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வால்பாறையில் மொத்தம், 53 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் இந்த கல்வியாண்டில், 1,214 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், 32 பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் இரு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் எட்டு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இதே நிலை தொடர்ந்தால், மேலும் பல பள்ளிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க, தேயிலை அல்லாத மாற்றுத்தொழில் துவங்க வேண்டும். சுற்றுலா சார்ந்த தொழில்களை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

Advertisement