பள்ளி மாவட்ட கிரிக்கெட் போட்டி செயின்ட் பீட்ஸ் அணி அசத்தல் வெற்றி

சென்னை: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், சென்னை மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான தாகூர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி, சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன. இதில் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

அந்த வகையில், சென்னையில் உள்ள சுமங்கலி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில், சாந்தோமின் செயின்ட் பீட்ஸ் பள்ளி ‘பி’ அணி, மதுரவாயலில் உள்ள தி ஷ்ராம் அகாடமி மற்றும் கேம்பிரிட்ஜ் சர்வதேச பள்ளியை எதிர்த்து மோதியது. இதில் டாஸ் வென்ற செயின்ட் பீட்ஸ் – பி அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்தது.

கடினமான இலக்கை துரத்திய மதுரவாயல் பள்ளி அணி வீரர்கள், செயின்ட் பீட்ஸ் அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஆட்ட முடிவில், மதுரவாயல் பள்ளி அணி, 26 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தது. இதனால் செயின்ட் பீட்ஸ் அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றது.

Advertisement