டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கத்தினர் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, குடும்பத்தோடு மாவட்ட அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடந்தது.

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். பொருளாளர் ஆறுமுகம், பிரசார செயலாளர் ஏழுமலை, செயற்குழு உறுப்பினர் முனியன், பொதுச் செயலாளர்கள் முருகன், அங்கப்பன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். டாஸ்மாக் விற்பனையாளர்கள் குடும்பத்தோடு பங்கேற்றனர்.

போராட்டத்தில், 23 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உரிய பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி நிதி உதவியை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட அலுவலகம் முன் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டதால், அலுவலகத்தின் மெயின் கதவை மூடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement