போலீஸ் கேமராக்கள், கம்பங்களை திட்டமிட்டு சேதப்படுத்தும் கும்பல்

தேனி, ஜூலை 11–தேனியில் போலீசார் வைத்துள்ள கேமராக்கள், அதன் கம்பங்களை சமூக விரோத கும்பல் திட்டமிட்டு சேதப்படுத்துவதால் குற்ற வழக்குகளில் சோதனையை தீவிரப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். 

தேனி நகர்பகுதியில் மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு, கம்பம் ரோடு அல்லிநகரம் என பல இடங்களில் கடந்த இரு ஆண்டுகளில் போலீஸ் சார்பில் நுாற்றுக்கும் அதிகமான கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் சில கேமராக்களை எஸ்.பி., அலுவலகத்தில் இருந்தும், சிலவற்றை டி.எஸ்.பி., அலுவலகத்தில் இருந்தும், சிலவற்றை பஸ் ஸ்டாண்ட் புற காவல் நிலையத்தில் இருந்தும் கண்காணிக்கும் வகையில் வைத்திருந்தனர். ஆனால், பெரியகுளம் ரோட்டில் மேற்கு சந்தை, நகராட்சி அலுவலகம் அருகே கேமராக்கள் வைக்கப்பட்டிருந்த கம்பம் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் கேமராக்கள் சேதப்படுத்தியும், கேமராக்களின் கோணங்களை திட்டமிட்டு மாற்றி உள்ளனர். இவ்வாறான செயல்களை சமூக விரோதிகள் சிலர் தொடர்ந்து செய்கின்றனர். கேமராக்கள் செயல் இழப்பதை போலீசாரும் கண்டு கொள்வதில்லை. ஏதேனும் வழக்குகள் விசாரணை துவங்கும் போது தான் கேமராக்கள் செயல்படுவதில்லை என்பதை உணர்கின்றனர். போலீசார் வைத்துள்ள கேமராக்களை திட்டமிட்டு சேதப்படுத்தும், கோணங்களை மாற்றி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement