தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு இல்லை; மீண்டும் சொல்கிறது கர்நாடகா

7


பெங்களூரு: ''கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, விவசாயத்திற்கு திறக்க போதுமான தண்ணீர் இல்லை. கே.ஆர்.எஸ்., அணை நிரம்பும் போது, தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என நம்புகிறேன்,'' என, கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறினார்.

பெங்களூரு விகாஸ் சவுதாவில் உள்ள அலுவலகத்தில், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி: கே.ஆர்.எஸ்., அணையில் தற்போதைக்கு உள்ள நீரை வைத்து, அடுத்த நான்கு மாதங்களுக்கு குடிநீர் தேவையை, எந்த பிரச்னையும் இன்றி பூர்த்தி செய்ய முடியும். ஆனால் பாசனத்திற்கு தண்ணீர் வழங்க, அணையில் போதுமான தண்ணீர் இல்லை.

மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகி உள்ளது. இந்த திட்டத்தால், 12,000 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும். மேகதாதுவில் அணை கட்டினால், பெங்களூருக்கு, 7.5 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும். காவிரி தண்ணீரை திறக்கும்படி, தமிழக அரசு எங்களிடம் கேட்கவில்லை' என, நான் கூறியதாக, தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். நான் அப்படி கூறவே இல்லை.

காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் பரிந்துரை அடிப்படையில், தண்ணீரை திறப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டியது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தான். இந்த விவகாரத்தில், கர்நாடக அரசுக்கு எந்த பங்கும் இல்லை. தற்போதைய நிலவரப்படி, காவிரி படுகையில், மோசமான சூழ்நிலை உள்ளது. வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று, கே.ஆர்.எஸ்., அணை நிரம்பும் போது, தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement