அமெரிக்கா- ஈரான் போர் மீண்டும் தீவிரம்; கச்சா எண்ணெய் விலை உயர்வு

1



நமது நிருபர்




அமெரிக்கா- ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்த துவங்கி உள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. ஆனால், இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதையடுத்து, ஈரானுடன் அமைதி பேச்சு நடத்துவதில் எவ்வித பயனுமில்லை எனக்கூறி, போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்; ஆனாலும், அமைதி பேச்சை தொடர்வதாக தெரிவித்தார்.

இருப்பினும், இரு தரப்பும் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பரஸ்பரம் தாக்கி வருகின்றன. ஈரான் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக, மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்கி வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடுவது குறித்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, அமெரிக்க படைகள் ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று (ஜூலை 13) கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 3.51 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 78.68 டாலராக வர்த்தகமாகிறது.
அமெரிக்க WTI கச்சா எண்ணெய் 3.47 சதவீதம் உயர்ந்து 73.89 டாலராக வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து பேரல் 78 டாலர்களைக் கடந்த நிலையில், ஈரான் விவகாரத்தில் மீண்டும் பதற்றம் நிலவுவதால் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement