இஸ்ரோவின் முக்கிய திட்டங்களில் இருந்து விலகுவோரை தடுக்க விண்வெளித்துறை நடவடிக்கை

பெங்களூரு: இஸ்ரோவின் முக்கிய திட்டங்களில் இருந்து சமீபகாலமாக அதிகரித்து வரும் ராஜினாமாக்களைக் கட்டுப்படுத்தும் வகையில், விஞ்ஞானிகளின் விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமாக்கள் மீதான விதிகளைக் கடுமையாக்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள ககன்யான் மற்றும் முக்கிய விண்வெளித் திட்டங்களின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, விஞ்ஞானிகள் பணி விலகுவதைத் தடுக்கவும், விருப்ப ஓய்வு (VRS) பெறுவதைக் கட்டுப்படுத்தவும் விண்வெளித் துறை கடுமையான புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. முக்கிய திட்டங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகளின் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வு விண்ணப்பங்கள் வழக்கமான நடைமுறையாக ஏற்றுக்கொள்ளப்படாது.

திட்டங்கள் முடியும் வரை பணியாளர்களின் விண்ணப்பங்களை மைய இயக்குநர்கள் ஏற்கக் கூடாது. அதற்குப் பதிலாக அந்த விண்ணப்பங்கள், துறை இயக்குநர்களின் பரிந்துரையுடன் இறுதி முடிவிற்காக விண்வெளித் துறைக்கு அனுப்பப்படும். ககன்யான் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் விலகல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
பணி விலகல்களின் எண்ணிக்கையை விண்வெளித் துறை வெளியிடவில்லை என்றாலும், குறைந்தபட்சம் 100 முதல் 120 வரை இருக்கும் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் விலகல்களை ஒப்புக்கொண்டாலும், அதைச் சமாளிக்க இஸ்ரோ தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: '' யாராவது விலக நேர்ந்தால், வேறு ஒருவர் பொறுப்பேற்பார். நாங்கள் அதைக் கவனித்து வருகிறோம்,” என நாராயணன் கூறினார்.

Advertisement