காசியை மாற்றியமைக்க கங்கை, வருணா வழித்தடங்கள்; ரூ.25,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்

7


புதுடில்லி: கங்கை மற்றும் வருணா ஆகிய இரட்டை வழித்தடங்கள், வாரணாசிக்கு போக்குவரத்து வசதியை பெருமளவில் மேம்படுத்த உள்ளன. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வருணா நதிக்கரையோரம் 6/4 வழிச்சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு 10 ஆயிரத்து 998 கோடி ரூபாய். கங்கை நதிக்கரையோரத்தில் 14 ஆயிரத்து 448 கோடி ரூபாயில் ஆறு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வாரணாசிக்கு போக்குவரத்து வசதியை பெருமளவில் மேம்படுத்த மொத்தமாக ரூ.25 ஆயிரம் கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வாரணாசியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பயணிகளின் வருகை அதிகரித்து வரும் வேளையில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது இந்த நகரத்திற்கு ஆண்டுதோறும் 15 கோடி சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள் வருகின்றனர். இதனால், அதிகரித்து வரும் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய உள்கட்டமைப்பு அத்தியாவசியமாகிறது. கங்கை மற்றும் வருணா வழித்தடத் திட்டங்கள் நகர்ப்புற மேம்பாட்டிற்கு முக்கியமானதாகும்.

46 கி.மீ நீளமுள்ள ஆறு வழி கங்கை உயர்மட்டச் சாலையானது , கங்கை நதிக்கரையோரமாக NH-19-ஐ வாரணாசி சுற்றுச் சாலையுடன் இணைக்கும். இந்த விரைவுச்சாலை செயல்பாட்டுக்கு வந்தவுடன், பயண நேரம் 60 நிமிடங்களிலிருந்து வெறும் 20 நிமிடங்களாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. வாரணாசியில், இந்த இரட்டைத் திட்டங்கள் சுற்றுலா மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும், நகரத்திற்கு ஒரு புதிய அடையாளமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement