பெண்கள் பள்ளி இல்லாத திருப்பாசேத்தி

திருப்பாச்சேத்தி:திருப்பாச்சேத்தியில் பெண்களுக்கு பள்ளி தனியாக தொடங்க வேண்டும் என 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் உள்ளாட்சி பிரதிநிதிகள் குரல் கொடுக்காததால் கிடப்பில் உள்ளது.

வளர்ந்து வரும் திருப்பாச்சேத்தியைச் சுற்றிலும் கானுார், கருங்குளம், மாரநாடு, ஆவரங்காடு, பிச்சைப்பிள்ளையேந்தல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் இருந்து திருப்பாச்சேத்திக்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் கல்வி பயில வந்து செல்கின்றனர்.

திருப்பாச்சேத்தியில் ஆரம்பபள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தனியாக பெண்கள் பள்ளி இல்லாததால் 10ம் வகுப்புடன் மாணவியர் கல்வி நிறுத்தப்படுகிறது.

திருப்பாச்சேத்தியில் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளி தான் மேல்நிலைக் கல்வி வரை செயல்படுகிறது. அடிக்கடி மாணவிகளை கேலி செய்வது , தகராறு செய்வது உள்ளிட்ட பிரச்னைகளால் பலரும் 10ம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்கு அனுப்புவது கிடையாது.

திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களில் பெண்கள் பள்ளி இருந்தாலும் அவ்வளவு துாரத்திற்கு தனியாக அனுப்ப யோசித்து பலரும் மாணவியர்களை உயர்கல்வி பயில அனுமதிப்பது கிடையாது.

எம்.எல்.ஏ., எம்.பி., என பலரிடமும் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே தமிழக அரசு திருப்பாச்சேத்தியில் பெண்கள் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement