கறை படியாத அதிகாரிகளுக்கே பதவி உயர்வு வழங்க வேண்டும்: ஐகோர்ட் கருத்து

4

சென்னை : 'ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, துறை ரீதியிலான விசாரணையை எதிர்கொண்டுள்ள பதிவுத்துறை டி.ஐ.ஜி.க்கு பதவி உயர்வு வழங்க மறுத்தது சரியே' என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 'கறை படியாத அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்' என்றும் கூறியுள்ளது.


பதிவுத்துறையில், கூடுதல் ஐ.ஜி.,யாக பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த டி.ஐ.ஜி., - வி.ஏ.ஆனந்த்க்கு எதிராக, ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதால், பதவி உயர்வு வழங்கப்படவில்லை.


இதை எதிர்த்து, ஆனந்த் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, துறை ரீதியிலான நடவடிக்கைக்கு முன்பே தயாரிக்கப்பட்ட பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்ததால், ஆனந்த்க்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டார்.


இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, 'பதவி உயர்வுக்கான பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளது என்பதற்காக, பதவி உயர்வு வழங்க வேண்டும் என, உரிமையாக கோர முடியாது. கறை படியாத அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்' எனக்கூறி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.

Advertisement