மாணவர் தின விழா கண்காட்சி

புதுச்சேரி: கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த மாணவர் தின விழா கண்காட்சியில் சோலை நகர் அரசு பள்ளியின் சூரிய கோவில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. 

புதுச்சேரி அரசு  கல்வித்துறை சார்பில் கருவடிக்குப்பம், காமராஜர் மணி மண்டபத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, மாணவர் தின விழா நடந்தது.

விழாவில், புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் பல்வேறு கல்வி சார்ந்த 22 கண்காட்சி அரங்குகள், இரண்டு நாட்களுக்கு அமைக்கப்பட்டிருந்தன.

அதில், புதுச்சேரி  வட்டம்-1ன் சோலை நகர், அரசு தொடக்கப்பள்ளி சார்பாக ஒடிசா மாநிலத்தின் கோனார்க் சூரிய கோவில் மற்றும் மாநிலத்தின் பாரம்பரிய உணவு, உடை, அணிகலன்கள், நடனம், கோவிலின் சிறப்பு அம்சங்கள், கலாசாரம் போன்றவைகளை வெளிப்படுத்தும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

கண்காட்சியில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் அரங்கை பார்வையிட்டு, சிறப்பம்சங்கள் குறித்து கேட்டறிந்தனர். ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Advertisement