தாசில்தார், துணை தாசில்தார் கலந்தாய்வு அரசாணை பெற்று நடத்த கோரிக்கை
விழுப்புரம்: தாசில்தார், துணை தாசில்தார் நிலையிலான கலந்தாய்வை அரசாணை பெற்று நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் சுந்தரராஜன் அறிக்கை:
வி.ஏ.ஓ.,க்களுக்கான கலந்தாய்வு அரசாணை உள்ளது. அதிலுள்ள நடைமுறை பின்பற்றுவதில் விருப்பு, வெறுப்பு இருக்க வாய்ப்பு இல்லை. விழுப்புரம் முன்னாள் கலெக்டரிடம், தாசில்தார், துணை தாசில்தார் நிலையிலான கலந்தாய்வை அரசாணை பெற்று நடத்த கோரிக்கை விடுத்தோம். அவர் கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடுவதை தொடர்ந்தார். அந்த நிலையில் கலெக்டர் மாற்றப்பட்டார்.
அந்த கலெக்டரை தவறாக வழி நடத்திய அதே சார்நிலை அலுவலர்கள் மீண்டும் அதை செயலாக்குவது பதற்றத்தையே உருவாக்கும். கவுன்சிலிங்கை அரசாணை இல்லாமல் நடத்தக்கூடாது என விழுப்புரம் கலெக்டரை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.