லாரி அதிபர் வீட்டில் நகைகளை திருடியவர் கைது

மோகனுார்:மோகனூர் சுப்ரமணியபுரம் ஈ.பி. காலனியில் வசித்து வருபவர் ரமேஷ் பாபு, 61, லாரி உரிமையாளர். இவரது மனைவி மல்லிகா அரியலுாரில் டி.ஆர்.ஓ.,வாக பணியாற்றி வருகிறார். இதனால் ரமேஷ் பாபு மோகனுாரில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்.,5ம் தேதி தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக ரமேஷ் பாபு அரியலுார் சென்றார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த தோடு, மோதிரம், செயின் உள்ளிட்ட ஐந்தே கால் பவுன், 42 கிராம் தங்கம் மற்றும், 6 வெள்ளி டம்ளர் உள்ளிட்ட பொருட்களை திருடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மோகனுார் வாங்கல் காவிரி ஆற்று பாலத்தில், நடந்து சென்ற ஒருவரை போலீசார் விசாரித்தனர். அதில், திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறை சேர்ந்த முகமது சித்திக், 80, என்பதும், தற்போது தர்மபுரி மாவட்டம் நாவரசம்பேட்டையில் வசித்து வருவதும் தெரிந்தது. ராசிபுரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்த முகமது சித்திக், மோகனூர் பகுதியில் பூட்டியிருந்த ரமேஷ் பாபு வீட்டை நோட்டமிட்டு நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.இதையடுத்து அவரை மோகனுார் போலீசார் கைது செய்து, தங்கம், வெள்ளி பொருட்களை மீட்டனர். அவரை நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம், 2ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement