திருச்செங்கோட்டில் 2 டன் குட்கா பறிமுதல்

திருச்செங்கோடு:திருச்செங்கோட்டில், தோட்டத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 2 டன் குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கொல்லப்பட்டி, செம்மங்காட்டில் உள்ள தோட்டத்து வீட்டின் உரிமையாளர் பழனியம்மாள், 77. இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக, திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது ஏமாப்பள்ளியில் விசைத்தறி தொழில் செய்து வரும் கார்த்திக்குமார், 44, அவரது தம்பி சதீஷ், 32, ஆகியோருக்கு வாடகைக்கு விட்டதாக தெரிவித்தார். பின்னர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கார்த்திக்குமார், சதீஷ் ஆகியோர் கடந்த, 4ம் தேதி திருச்செங்கோடு அருகே உள்ள தோ.கவுண்டன்பாளையத்தில் உள்ள குடோனில், 2 டன் குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருந்தது தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குட்கா புகையிலை பொருட்களை, திருச்செங்கோடு டி.எஸ்.பி., தங்கவேல் பார்வையிட்டார்.

Advertisement