சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேனா? சீமான் சொல்வது இதுதான்!

8

திருப்பூர்: தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியா, இல்லையா என்ற கேள்விக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.

திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் சீமான் கலந்து கொண்டார். திரண்டிருந்த ஏராளமானவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது;

நான் ஒன்றும் மன்னன் இல்லை. மந்திரி மகன் இல்லையே, கூப்பிட்டால் அத்தனை பேரும் எனக்கு ஓட்டு போடுவதற்கு. தோற்று போனாலும் 20 லட்சம் மக்கள் எனக்கு ஓட்டு போட்டு, அங்கே இருந்து என்னை போக வேண்டாம் என்று கூறி உள்ளனர்.

இப்போதும் கூட பாரதிராஜாவின் மறைவின் போது அவரது 30ம் நாள் காரியம் செய்து கொண்டு இருக்கும் போது என் தந்தை வயது உள்ள ஒருவர் பின்னால் இருந்து என் தோளை தட்டினார்.

50 பேருடனாவது நீ உள்ளே சென்றுவிடுவாய்(சட்டசபையை குறிப்பிடுகிறார்) என்று ரொம்ப ஆசைப்பட்டு கொண்டிருந்தேன். நடக்கவில்லை, நீ விட்டுவிடாதே. இடைத்தேர்தலில் நின்றாவது நீ உள்ளே(சட்டசபைக்குள் எம்எல்ஏவாக) சென்றுவிடு என்றார். நான் உறுதியாக போய்விடுகிறேன் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தேன். இந்த சிரிப்புடன் நீ உள்ளே செல்ல வேண்டும் என்றார்.

இவ்வாறு சீமான் பேசினார்.

அண்மையில் முடிந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகளுக்கு சில நாட்கள் கழித்து, எம்எல்ஏக்கள் தொடர் ராஜினாமா பெரும் விவாதங்களை எழுப்பி இருக்க, தவெகவுக்கு எதிராக பொது வேட்பாளராக சீமான் நிறுத்தப்படுகிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்தன. தற்போது, இன்றைய சீமானின் பேச்சு இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுவது நிச்சயம் என்பதை உறுதி செய்வதாக இருக்கிறது.

Advertisement