கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் ரூ.7 .5 லட்சம் லஞ்சத்தொகை பரிமாற்றம்; சோதனையில் அம்பலம்

8


கோவை: கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடி சோதனையில், ஆன்லைன் வழியாக ரூ.7.5 லட்சம் ரூபாய் லஞ்சத் தொகை பரிமாற்றம் செய்துள்ளது தெரிந்தது. மேலும், ரொக்கமாக ரூ. 5 ஆயிரம் சிக்கியது.

கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு தாசில்தார் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., ராஜேஷ் தலைமையில் குழுவினர் நேற்று மாலை, 4:30 மணியளவில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.அலுவலக அறைகள் மட்டுமின்றி, பார்க்கிங்கில் நின்று இருந்த அலுவலர்களின் வாகனங்களிலும் சோதனை செய்தனர். அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் விசாரித்தனர். தொடர்ந்து, பெண் அலுவலர்கள், பொதுமக்கள் முழுமையான சோதனைக்கு பின், 7:30 மணிக்கு வெளியில் அனுப்பப்பட்டனர்.

லஞ்ச பணம் பெரும்பாலும் ஆன்லைன் வழியாக பெறப்பட்டதை கண்டறிந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அனைத்து ஊழியர்களின், ஆன்லைன் செயலிகளை ஆய்வு செய்தனர். அதில், லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ரொக்கமாக ரூ.5 ஆயிரம் சிக்கியது. இரவு, 10: 00 மணியை கடந்தும் சோதனை நடந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., ராஜேஷ் கூறுகையில், ''துணை தாசில்தார், ஆர்.ஐ., வி.ஏ.ஓ., இன்ஜினியர், உதவியாளர் வங்கி கணக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது, ரூ.7.5 லட்சம் லஞ்சத் தொகை பரிமாற்றம் செய்துள்ளது தெரிந்தது'' என்றார்.

Advertisement