சென்னை -பெங்களூரு இடையே புல்லட் ரயில்: ரூ.18 ஆயிரம் கோடி திட்டத்திற்கு டெண்டர்

36

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூருக்கு, புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த, 'டெண்டர்' வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு வரை, புல்லட் ரயில் திட்டப்பணிகள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு, 'டெண்டர்' வெளியிடப்பட்டுள்ளது. தேசிய அதிவேக ரயில் கழகம் வெளியிட்டுள்ள, புதிய டெண்டரின்படி, ஒப்பந்ததாரர் இத்திட்டத்தின் திருத்தப்பட்ட, புதிய வழித்தட வரைபடத்தின் அடிப்படையில், பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மொத்தம், 306 கி.மீ., துாரம் உடைய, இந்த அதிவேக வழித்தடத்தில், சென்ட்ரல், பூந்தமல்லி, அரக்கோணம், ஆந்திர மாநிலம் சித்துார், கர்நாடகா மாநிலம் கோலார், கொடிஹள்ளி, ஒயிட்பீல்டு மற்றும் பெங்களூரு என, எட்டு முக்கிய ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் பரந்துாரில் அமையவுள்ள, புதிய விமான நிலைய இணைப்புக்காக, பரந்துார் தற்போதைக்கு, 'எதிர்கால நிலையமாக' இருக்கும்.

மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் இயங்கக்கூடிய, இந்த புல்லட் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் போது, சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான பயண நேரம், ஏழு மணி நேரத்தில் இருந்து 73 நிமிடங்களாக குறையும் என, எதிர்பார்க்கிறோம். சென்னையின் முதல் புல்லட் ரயில் நிலையம், சென்னை புறநகர் ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் அமைக்கப்படும்.

அது சென்னை சென்ட்ரல் மற்றும் மெட்ரோ நிலையங்களுடன் முறையே 100 மீட்டர் மற்றும் 50 மீட்டர் நீளமுள்ள இணைப்புகள் வாயிலாக, இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 306 கி.மீ., வழித்தடத்தில், 28 கி.மீ., துாரம் நிலத்தடி சுரங்கப்பாதையாக அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை வரும் 2035க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு, 18,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement