மது குடிக்க பணம் தராததால் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

புதுச்சத்திரம்:ராசிபுரம், கூனவேலம்பட்டி, பாலப்பாளையம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் ராஜீ, 60; கூலித்தொழிலாளி. இவரது மனைவி குப்பாயி. தம்பதிக்கு சம்பத், 38, சவுந்தர்ராஜ், 26, என, இரண்டு மகன்கள். இதில் கட்டட மேஸ்திரியான சவுந்தர்ராஜூக்கு இன்னும் திருமணமாகவில்லை. மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சவுந்தர்ராஜ், மது குடித்துவிட்டு வந்து தந்தை ராஜீவிடம், மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதற்கு ராஜீ தன்னிடம் பணம் இல்லை என, கூறியுள்ளார். இதனால் ஆத்திர மடைந்த சவுந்தர்ராஜ், 'பணம் தரவில்லை என்றால் ஏதாவது செய்து கொள்வேன்' எனக்கூறி, வீட்டிற்குள் சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். ஓட்டை பிரித்து உள்ளே சென்று பார்த்தபோது, சவுந்தர்ராஜ், சேலையால் துாக்கிட்டு தொங்கியபடி இருந்தார். அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், சவுந்தர்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement