இருவேறு இடங்களில் அனுமதியின்றி வைத்திருந்த வெடிமருந்துகள் பறிமுதல்

வானுார்: வானுார் அருகே இருவேறு இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வானுார் அடுத்த கரசானுாரில் உள்ள கல்குவாரியில், அரசு அனுமதியின்றி வெடிமருந்துகள் வைத்து பயன்படுத்துவதாக வானுார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது, ஜஸ்டின் பிரபு என்பவரின் கல்குவாரியில் அனுமதியின்றி செலரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பேரில்  குவாரியில் இருந்த 403 செலரிகளை போலீசார் பறிமுதல் செய்து, கல்குவாரி உரிமையாளரான ஜஸ்டின் பிரபு,  நெமிலியை சேர்ந்த மேஸ்திரி ரஞ்சித், 30; ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மற்றொரு சம்பவம்; கிளியனுார் அடுத்த கீழ்சித்தாமூரில் முத்துராமன் என்பவரது விவசாய நிலத்தில் கிணறு வெட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலத்தில் அரசு அனுமதியின்றி வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டதாக கிளியனுார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் சென்று சோதனை நடத்தினர். அப்போது, அவரது நிலத்தில் அனுமதியின்றி 202 செலரிகள் மற்றும் 52 டெட்டனேர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வெடிமருந்துகளை பறிமுதல் செய்து, கிணறு வெட்டும் பணியை மேற்கொண்டு வந்த நெமிலியை சேர்ந்த மேஸ்திரி மணி மீது வழக்கு பதிவு செய்தனர்.

 

Advertisement