நிதி கல்வியறிவை உயர்கல்வியுடன் ஒருங்கிணைப்பது அவசியம்:  புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் நிதி கல்வியறிவு குறித்து தேசிய மாநாடு நடந்தது.

புதுச்சேரி பல்கலைக்கழகம், இந்தியா அரசின் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில், முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் சார்பில், 'டிஜிட்டல் நிதி கல்வியறிவு மற்றும் நடத்தை திறன்களின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் தேசிய மாநாடு நடந்தது. வங்கி தொழில்நுட்பத் துறையின் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். பல்கலைக்கழக மாணவர் நலத் துறை டீன் வெங்கடராவ் நோக்கவுரையாற்றினார்.

மாநாட்டை துவக்கி வைத்த துணைவேந்தர் பிரகாஷ் பாபு பேசுகையில், 'நிதி கல்வியறிவை உயர்கல்வியுடன் ஒருங்கிணைப்பது அவசியம். டிஜிட்டல் மாற்றம் இளம் முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் அபாயங்களையும் உருவாக்கியுள்ளது. ஆகையால் விழிப்புணர்வு, விமர்சன சிந்தனை மற்றும் பொறுப்பான நிதி நடத்தை ஆகியவை கல்வியின் அவசியமான பகுதியாக மாற வேண்டும்' என்றார்.

சிறப்பு அமர்வில், என்.எஸ்.இ., பங்கு சந்தை தலைமை பொருளாதார நிபுணர் தீர்த்தங்கர், இந்தியா அரசின் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் மொஹாபத்ரா, தலைமை செயல் அலுவலர் அனிதா ஷா அகெல்லா பல்கலைக்கழக மேலாண்மை பள்ளியின் டீன் நடராஜன் பேசினர்.

மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற கலந்துரையாடல் சிறப்பு அமர்வில் மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர். இணைய மோசடி தடுப்பு, பொறுப்பான முதலீடு, நடத்தை சார்ந்த முன்னோக்குகள், டிஜிட்டல் கட்டண பாதுகாப்பு மற்றும் இந்தியா முன்வைக்கும் நிதிச் சந்தை வாய்ப்புகள் போன்ற தலைப்புகளில் நிபுணர்களுடன் நேரடியாக விவாதித்தனர்.

Advertisement