ஊராட்சி குடிநீரை விற்றவர் மீது வழக்கு

மயிலம்: மயிலம் அருகே கிராம ஊராட்சிக்கு சொந்தமான மேல்நிலைக் குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து விற்றவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

மயிலம் அடுத்த சின்ன நெற்குணம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து தண்ணீரை டிராக்டர் டேங்க்கரில் எடுத்துச் சென்று விற்பனை செய்வதாக மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கைலாசம், 48; என்பவர் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் இருந்து  தண்ணீரை திருடி டிராக்டர் டேங்கரில் ஏற்றி விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன், 40; அளித்த புகாரின் பேரில், கைலாசம் மீது மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வாகின்றனர்.

Advertisement